கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 7, 2022

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

விஷ்மாவும் ரந்திகவும் புதிதாக திருமணமான தம்பதிகள், அவர்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள். மேலும் அவர்கள் மிகவும் எளிமையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையொன்றை வாழ்ந்து வந்தனர். விஷ்மாவின் கணவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் நிலையில் அவளோ வீட்டில் சொந்தமாகத் தொழில் செய்து வந்தாள்.

எதிர்பாராத தருணத்தில், விஷ்மாவுக்கு விசித்திரமான தெளிவற்ற தகவல்களும், மிஸ்டு கால்களும் வந்திருந்தன. இதனைக் கண்ணுற்ற அவள் உடனடியாக அழைப்பெடுத்து, விபரங்களை கேட்டாள்.

விஷ்மா: ஹலோ, இந்த இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது, இது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
மர்ம அழைப்பாளர்: நான் யார் என்பதை அறிவது உங்கள் வேலையல்ல, நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்

பிறகு அழைப்பைத் துண்டித்துவிட்டு விஷ்மா, இந்தச் சம்பவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் கோபமான மனநிலையிலிருந்தபோது அவளுடைய தோழிகளில் ஒருவரான ஆஷாவிடமிருந்து அழைப்பு வந்தது;

ஆஷா: ஹாய் விஷ்மா, உனக்கு என்ன ஆனது? ஏன் இதுபோன்ற செயல்களைச் செய்கிறாய்??
விஷ்மா: (பதட்டத்துடன்) ஏன் என்ன? எனக்கு எதுவும் தெரியாது, தயவுசெய்து என்னவென்று சொல்லுங்கள்?

அப்போது ஆஷா, விஷ்மாவின் ஃபேஸ்புக் கணக்கு மூலம் தனக்கு ஒரு நட்பு கோரிக்கை வந்ததாகவும், அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு பார்த்த போது விஷ்மாவின் புரொஃபைலில் நிறைய நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகக் கூறினாள். அப்போது தெரியாத அந்த அழைப்பைப் பற்றி விஷ்மாவிற்கு புரிந்தது.

முன்னதாக மிஸ்டு கால் வந்த இலக்கத்திற்கு விஷ்மா உடனடியாக அழைப்பை மேற்கொண்டாள்.

விஷ்மா: என்ன செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?
மர்ம அழைப்பாளர்: ஆம் நான்தான் செய்தேன், நீங்கள் அதை அகற்ற விரும்பினால் ரூ.500,000/-ஐ எனது கணக்கில் வைப்புச் செய்ய வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை பெற ஹிதவதியை அழைத்தாள் விஷ்மா. ஹிதவதி அவளுக்கு பின்வருமாறு அறிவுரை கூறினாள்,

  • போலியான பேஸ்புக் கணக்கை அகற்ற வேண்டுமானால் அதைப் புகாரளிக்கவும்.
  • இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை (தண்டனை வழங்க) எடுக்க விரும்பினால், அவள் சார்ந்த காவல் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) சமூக ஊடக முறைப்பாட்டுப் பிரிவில் புகார் அளிக்கலாம்.

பின்னர் அவள் ஹிதவதியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தனது முறைப்பாட்டை, குற்றப் புலனாய்வு திணைக்களப் (சிஐடி) பணிப்பாளருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தாள். அத்துடன் தனது கணவருடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணிபுரியும் கணவரின் நண்பர் ஒருவரைச் சந்தித்து இந்த விடயத்திற்காக உதவிகோரினார்கள். CID யினரால், மிரட்டல் விடுத்த நபர் பற்றிய அனைத்து விபரங்களையும் கண்டறிய முடிந்தது, மேலும் ஒரு குழுவுடன், அவர்கள் இந்த குற்றவாளியைத் தேடச் சென்றனர். இறுதியாக, மேலதிக விசரைணைக்காக குறித்த நபரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.

சரியான வழிகாட்டுதலை வழங்கியமைக்காக ஹிதவதியை மீண்டும் அழைத்த விஷ்மா நன்றி தெரிவித்தாள்.

முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:

  • போலி அல்லது ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கைப் புகாரளிக்க https://www.hithawathi.lk/ta/help-center-ta/social-media/facebook/fake-accounts/ இல் கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். தேவைப்பட்டால் உதவி பெற ஹிதவதியைத் தொடர்பு கொள்ளவும்.
  • இணையச் சிக்கல்கள் தொடர்பான பயனுள்ள தொடர்பு புள்ளிகளைப் பெற https://www.hithawathi.lk/how-to-get-help/useful-contact-information/ ஐப் பார்வையிடவும்.
  • சைபர்-குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாக பதியப்பட்டிருந்தால், அவற்றைக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் dir.cid@police.lk எனும் மின்னஞ்சலூடகவும் புகார்களை அனுப்பி வைக்க முடியும்.
  • இதுபோன்ற சம்பவங்களால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டால் 1926 (சிறப்பு மனநல ஆதரவு சேவை) அல்லது சுமித்ரயோவை தொடர்பு கொள்ளவும்.